மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளைக் கொண்டாட குலோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியில் (ஜிஐஐஎஸ்) அக்டோபர் 2ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காந்தி போதித்த அகிம்சையை மாணவர்களிடத்தில் நிலைநாட்ட அனைத்துலக பள்ளிகள் அறநிறுவனமும் (ஜிஎஸ்எஃப்) இந்திய வம்சாவளியினர் அனைத்துலகச் சங்கமும் (கோபியோ) இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.
காந்தியின் பிறந்தநாள் ‘காந்தி ஜெயந்தி’ என ஆண்டுதோறும் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தேசிய விடுமுறையாகவும் உள்ளது. ஐக்கிய நாட்டு அமைப்பால், அனைத்துலக அகிம்சை நாளாகவும் இது அனுசரிக்கப்படுகிறது.
அகிம்சை சார்ந்த சுவரொட்டி, புகைப்படப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
நிலை 6 முதல் 8 மாணவர்களுக்கான சுவரொட்டி செய்யும் போட்டியில் மஹிகா ஹேமானி, சூர்யான்ஷி சட்டோபதே, அத்விக் சக்ரபோர்த்தி ஆகியோர் முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.
நிலை 9 முதல் 12 மாணவர்களுக்கான புகைப்படப் போட்டியில் ஆஷிஷ் பி. வாகை சூடினார்.
நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளராக சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையர் டாக்டர் ஷில்பாக் அம்புலே வருகையளித்தார்.
“காந்தியின் காலங்கடந்த அறநெறிகள் இன்றுவரை உலகெங்கிலும் வாழ்ந்து வருகின்றன,” என்ற அவர், காந்தியின் பிறந்தநாளை ஒட்டி தொடங்கிய ‘சுவச் பாரத்’ இயக்கம் பற்றியும் விவரித்தார்.
“போர், கலவரங்கள் நிலைத்துவரும் இன்றைய உலகில் காந்தியின் வழியில் அமைதி நிலைக்க ஒவ்வொருவரும் பங்காற்றுவோம்,” என்றார் கோபியோ சிங்கப்பூர் தலைவர் மு. ஹரிகிருஷ்ணன்.
காந்தியின் பிறந்தநாளை ஒட்டி ‘சுவச் பாரத்’ இயக்கம்
2014 அக்டோபர் 2ஆம் தேதி இந்தியா இந்த இயக்கத்தைத் தொடங்கியது. காந்தியின் 150வது பிறந்தநாளான 2019 அக்டோபர் 2ஆம் தேதி அனைத்துக் கிராமங்களிலும் திறந்தவெளியில் மலம் கழிப்பு நீங்கியதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, திறந்தவெளியில் குப்பைப் போடுவதை நீக்க மற்றோர் இயக்கமும் தொடங்கியது என்றும் அறிவித்தார் டாக்டர் அம்புலே.
மகாத்மா காந்தி கல்விமீது கொண்டிருந்த முக்கியத்துவம்
காந்தி முற்போக்குச் சிந்தனை உடையவர். அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்கப்பட வேண்டும் என நம்பினார். அவரது சில முக்கிய மேற்கோள்கள்:
“எழுத, படிக்கத் தெரிவது கல்வியின் முடிவும் அல்ல, தொடக்கமும் அல்ல; அது கல்வி பெறுவதற்கான ஒரு வழியே.”
“கல்வியின் முக்கியக் குறிக்கோள், மாணவர்களின் அறிவை மட்டுமல்லாது, குணத்தையும் மேம்படுத்துவதே ஆகும்”.