மலேசியாவில் புதிய கொவிட்-19 அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக மலேசிய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டில் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தலைநகர் கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலம் ஆகியவற்றில் உள்ள பல கடைகளில் கொவிட்-19 பரிசோதனைக் கருவிகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக ஏற்றம் கண்டுள்ளது.
இந்நிலையில், கூட்டமான இடங்களைத் தவிர்க்கும்படி மலேசியர்களுக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்திஉள்ளனர்.
மலேசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 0.6 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் அந்நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.2 விழுக்காடு ஏற்றம் கண்டிருப்பதாகவும் மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் 29ஆம் தேதி வரை 9,780 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக 3,381 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம் 29ஆம் தேதியன்று 1,050 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக பதிவான மரணங்களின் எண்ணிக்கை 25 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இருப்பினும், மேலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.