மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
இன்று, நாளை, நாளை மறுநாள் (ஏப்ரல் 19, 20, 21) மற்றும் அடுத்த திங்கட்கிழமை (ஏப்ரல் 24) என நான்கு நாள்களுக்கு மலேசியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் எல்லா வாகனங்களும் சுங்கக் கட்டணம் (டோல்) செலுத்தாமல் இலவசமாகச் செல்லலாம்.
நோன்புப் பெருநாளை ஒட்டி நேற்று திரு அன்வார் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர், ரஹ்மா இலவச டோல் திட்டம், நோன்புப் பெருநாள் காலகட்டத்தில் மலேசியர்களின் சுமையைக் குறைப்பதற்காக அமல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
“நாடு முழுவதும் உள்ள 33 நெடுஞ்சாலைகளிலும் செல்லும் எல்லாவிதமான வாகனங்களுக்கும் இந்த நான்கு நாள் சலுகை பொருந்தும்.
“பெருநாள் காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புபவர்களின் செலவைக் குறைக்க இது உதவும்.
“மேலும், சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான பயணத்தைத் திட்டமிடுவதற்கும் இச்சலுகை கைகொடுக்கும்,’’ என்றார் அவர்.
மற்றொரு சலுகையாக, குறிப்பிட்ட சில பேரங்காடிகளில் ரஹ்மா திட்டத்தின்கீழ் கோழி, வெங்காயம் போன்ற உணவுப்பொருள்களுக்கு சிறப்பு விலைக்கழிவு வழங்கவும் திரு அன்வார் இணங்கியுள்ளார்.
நோன்புக் காலத்தில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வாகனங்கள் தனது நெடுஞ்சாலைக் கட்டமைப்பைப் பயன்படுத்தும் என்று ஆகப்பெரிய நெடுஞ்சாலை நிர்வகிப்பாளரான ‘பிளஸ் மலேசியா’ எதிர்பார்க்கிறது.
இந்த எண்ணிக்கை வழக்கத்தைவிட 20 விழுக்காடு அதிகம்.
மேலும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி திங்கட்கிழமை வரை மலேசியாவில் நான்கு நாள்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் திரு அன்வார் தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்.
வாகனமோட்டிகளுக்கு மேலும் ஒரு சலுகையை அவர் அறிவித்தார்.
2022ஆம் ஆண்டும் அதற்கு முன்னரும் விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதத் தொகை ஒவ்வொன்றும் 50 ரிங்கிட்டுக்குக் குறைக்கப்படும் என்பது அந்த அறிவிப்பு.
கட்டுப்படியாகக்கூடிய விலையில் வீடுகளைக் கட்டித் தரும் மேம்பாட்டாளார்களுக்கு குறைவான விலையில் சிமெண்ட் வழங்குவது மற்றொரு சலுகை.