சளிக்காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை பினாங்கிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் அதிகரித்துள்ளதையடுத்து, அங்குள்ள பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் சிகிச்சை நாடி வந்த நோயாளிகளையும் நிராகரிக்க வேண்டிய நிலைமை அங்குள்ள மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி இருப்பும் குறைந்துகொண்டே வருவதாக கூறப்படுகிறது. பினாங்கில் குறைந்தது 53 பேர் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலாங்கூரில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலையில், அவர்கள் வீட்டிலேயே இருந்தபடி ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
சிலாங்கூரின் சைபர்ஜெயா மற்றும் கிள்ளான் பகுதிகளில் பதிவான சளிக்காய்ச்சல் சம்பவங்களில், இருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டிருந்தது.
“அவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். குணமடைந்துவிடுவார்கள். வரும் அனைவரையும் எங்களின் பொது மருத்துவமனைகளில் அனுமதித்தால் மற்றவர்களுக்கும் தொற்றிவிடும்,” என்று துணை சுகாதார அமைச்சர் லீ பூன் சாய் கூறியதாக மலேசிய ஊடகங்கள் கூறின.
இருப்பினும், பொது சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் போதுமான சளிக்காய்ச்சல் மருந்து உள்ளதாக அவர் கூறினார்.
சென்ற மாதத்தின் வூஹான் நிமோனியா சம்பவங்களை அடுத்து சில தனியார் மருத்துவமனைகள் தங்களின் இருப்புகளை அதிகரித்துக்கொள்ளும் தேவை எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையே பிள்ளைகள் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்குப் பதிலாக மருத்துவ உதவி நாடுமாறு கூறியுள்ளது.
சளிக்காய்ச்சல் சம்பவங்கள் திடீரென்று அதிகரித்ததை அடுத்து கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளில் போதுமான கட்டில்கள் இல்லை என்று மலேசிய ஊடகமான ‘எஃப்எம்டி’ கூறியிருந்தது.
முடிந்தவரை வெளிநோயாளி சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தும் மருத்துவமனைகள், சளிக்காய்ச்சல் பாதிப்பு மிக கடுமையாக இருந்தால் மட்டுமே அவர்களை அனுமதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊடகம் தெரிவித்தது.
இந்நிலையில் சளிக்காய்ச்சல் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த பினாங்கின் கல்விப் பிரிவு முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசங்கள் தருவது அவற்றில் ஒன்று.
சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சளிக்காய்ச்சல் சம்பவங்களுக்கான கிருமி புதுவகையானது அல்ல என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா சென்ற வாரம் கூறினார்.
அத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணிக்கையில் தற்போதுள்ள சம்பவங்கள் உள்ளதாகவும் திரு ஹிஷாம் தெரிவித்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity