சிங்கப்பூர் அரசாங்கம் கொரோனா கிருமித்தொற்று அதிகரிப்பு காரணமாக ஜூன் 1 வரை நோய்ப் பரவலை முறியடிக்கும் அதிரடி நடவடிக்கைகளை நீட்டித்து இருக்கிறது.
என்றாலும் சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பும் மலேசிய ஊழியர்கள் அதிக அளவில் இல்லை என்று மலேசியாவின் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று (ஏப்ரல் 22) தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தொழிற்சாலைகள் இன்னமும் செயல்படுகின்றன. மூடப்பட்டு இருக்கின்ற தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை அவற்றில் வேலை செய்யும் மலேசியர்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கி இருக்கலாம் என்று சிங்கப்பூர் அரசு அனுமதித்து இருக்கிறது என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
சிங்கப்பூரில் சம்பளம் இல்லாமல் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ள மலேசிய ஊழியர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்களா என்பதை சிங்கப்பூர் அதிகாரிகளுடன் பேசி தெரிந்துகொள்ளும்படி மலேசியாவின் மனிதவள அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இருந்து ஒரே நேரத்தில் அல்லாமல் கட்டம் கட்டமாக மலேசியர்கள் நாடு திரும்பலாம் என்று இரண்டு அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டில் புதிதாக 50 பேரை கொரோனா கிருமி தொற்றியது என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களையும் சேர்த்து மலேசியாவில் 5,532 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். புதிதாக ஒருவர் மாண்டுவிட்டதாகவும் பலியானவர்கள் எண்ணிக்கை 93 என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரிலும் உலக அளவிலுமான அண்மைய கொவிட்-19 செய்திகளுக்கு எங்களுடைய பிரத்தியேக செய்திப் பக்கத்தை நாடுங்கள்: www.tamilmurasu.com.sg/coronavirus