சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமீறல்களுக்காக, கோலாலம்பூரில் இருக்கும் சோயா உணவுப்பொருள் செயலாக்க தொழிற்சாலை ஒன்றை கோலாலம்பூர் நகரமன்றம் (DBKL) நேற்று (ஜூன் 15) மூடியது.
சுகாதார மற்றும் சுற்றுப்புறத் துறையைச் சேர்ந்த DBKL அதிகாரி ஒருவர், அந்த தொழிற்சாலையின் நிலைமையைப் பார்த்து இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.
“அந்த இடத்தைப் பார்த்ததும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாந்தி வந்தது. இனிமேல் சோயாவையே சாப்பிடக்கூடாது என்று முடிவெடுக்கும் அளவுக்கு அந்த இடம் மோசமாக இருந்தது,” என்றார் அவர்.
பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின்படி அந்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். அங்கு கரப்பான்பூச்சிகளும் எலியின் எச்சங்களும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்த நிலவரப்படி, தரையில்தான் சோயா தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கையுறை, தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்கவில்லை; அவர்களில் பலர் சட்டைகூட அணிந்திருக்கவில்லை.
உணவுப் பொருள்கள் சட்டம் 1983ன் 11வது பிரிவின்கீழ் அந்த தொழிற்சாலை 14 நாட்களுக்கு மூட ஆணையிடப்பட்டுள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online