பெர்சத்து கட்சியின் தலைவராக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேராக் மாநில முதல்வர் அகமது ஃபைசால் அஸுமு கட்சியின் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு அவர்களை எதிர்த்து வேறு எவரும் போட்டியிடவில்லை.
பெர்சத்து உட்கட்சித் தேர்தல் நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட வட்டாரக் கூட்டங்களில் அக்கட்சியின் பேராளர்கள் 23,438 பேர் வாக்கு அளித்ததாக கட்சியின் தேர்தல் குழுத் தலைவர் சையது ஹமீது அல்பர் தெரிவித்தார்.
வேளாண்மை, உணவு அமைச்சர் டாக்டர் ரொனால்ட் கியண்டி, மூத்த அமைச்சர் (கல்வி) டாக்டர் ரட்ஸி ஜிதின், பாய ரம்புட் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ரஃபிக் நைஸாமுகைதீன் ஆகியோர் கட்சியின் உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெர்சத்து உட்கட்சித் தேர்தல் முதன்முறையாக நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட திரு அல்பர், நிரந்தரத் தலைவர், நிரந்தர துணைத் தலைவர், உச்ச மன்றத்திற்கான 20 உறுப்பினர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறினார்.
முன்னதாக மூத்த அமைச்சர் அஸ்மின் அலி உள்ளிட்ட 11 எம்.பி.க்கள் பெர்சத்து கட்சியில் இணைந்ததால் நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் பலம் கூடியது.