நிலச்சரிவு ஏற்பட்டு பேராக்கின் ஈப்போ பகுதியிலுள்ள சொகுசு உல்லாச விடுதியில் தங்கியிருந்த இரண்டு விருந்தினர்கள் உயிரிழந்துவிட்டதாக இன்று தெரிவிக்கப்பட்டது. ‘பஞ்சாரான் ஹாட்ஸ்பிரிங்ஸ் ரிடிரிட்’ விடுதியில் இருவரது உயிரைப் பறித்த நிலச்சரிவு, கனமழையால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
உல்லாச விடுதியின் ‘ஜக்கூஸி’ வகை குளியல் தொட்டியில் இருவரது உடல்களும் கிடைத்ததாகக் கூறப்பட்டது. சகதியைத் தோண்டியபோது சுமார் ஐந்து நிமிட இடைவெளியில் இருவரின் பேரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஈப்போ தீயணைப்பு, மீட்புப் பிரிவுத் தலைவர் அஸ்மி ஓஸ்மான் தெரிவித்தார்.
“திங்கட்கிழமை பின்னிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, தங்களது அறைகளை விட்டு வெளியேறி விடுதியின் வரவேற்புப் பகுதிக்கு வருமாறு விருந்தினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் உயிரிழந்த இருவரும் வரவில்லை. விடுதிப் பணியாளர் ஒருவர் அறைக்குச் சென்றபோது, அது பூட்டி இருந்தது. தொலைபேசி மூலமாகவும் தம்பதியுடன் தொடர்புகொள்ள முடியவில்லை,” என்றார் திரு அஸ்மி.
சுவர் ஏறிக் குதித்த அந்தப் பணியாளர், அறையின் ‘ஜக்கூஸி’ பகுதி மண்ணால் மூடப்பட்டிருந்ததைக் கண்டார். அதன் பின்னர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்று தேடி, மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இருப்பினும் சரிவு தொடர்வது போல் இருந்ததால் தங்களின் மீட்புப் பணிகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்து, மீண்டும் இன்று காலை ஏழு மணிக்குத் தொடர்ந்தனர்.
பின்னர், காலை 9.55 மணிக்கு இருவரின் உடல்களும் கிடைத்ததாகக் கூறப்பட்டது. சொகுசு உல்லாச விடுதி அமைந்திருக்கும் மலைப்பகுதியில் திங்கட்கிழமை முதல் பொழிந்து வந்த கனமழை, மண் சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
“பார்ப்பதற்கு அங்குள்ள மண் நிலையாக, அழகாக இருந்தாலும் கனமழையால் அது சரிந்துள்ளது. நிலச்சரிவு மீண்டும்கூட வரலாம்,” என்றார் பேராக் தாது, புவிஅறிவியல் பிரிவைச் சேர்ந்த மாட் நிஸா அப்துல் ரஹ்மான்.