கொவிட்-19 நோய்த்தொற்று நிலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்கள் பலர் தங்களுடைய கார்களை விற்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக பழைய கார்களை வாங்கும் நிறுவனங்களுடன் அவர்கள் பேசி வருகின்றனர்.
வாங்கி இரண்டு ஆண்டுகளே ஆன கார்களையும் விற்க பலர் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“மலேசியாவில் கடந்த ஜூன் மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிந்ததும், பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் திறக்கப்பட்டன. அப்போது முதல் பலர் தங்களுடைய கார்களை விற்பது குறித்து எங்களிடம் விசாரித்து வருகின்றனர்,” என்று பழைய கார்களை விற்கும் நிறுவனம் ஒன்றின் நிர்வாகியான சாங் கெங் கியோங், 38, கூறினார்.
செப்டம்பர் மாதத்திலிருந்து கார்களை விற்பது குறித்த தகவல் கேட்பவர்களின் எண்ணிக்கை 30% அதிகரித்து உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“ஆனால் தங்களது காரின் சந்தை மதிப்பை அறிந்த பிறகு சிலர் அதை விற்பது குறித்த முடிவை மாற்றிக்கொண்டனர். உதாரணமாக, காருக்கு 50,000 ரிங்கிட் கடன் இருந்து அதன் சந்தை மதிப்பு 40,000 ரிங்கிட்டாக குறைந்திருந்தால் கடனை அடைக்க மேலும் 10,000 ரிங்கிட் தேவைப்படும். இந்தச் சூழ்நிலையில் கார்களை விற்பதைவிட வைத்திருப்பதே மேல் என்று பலர் கருதுகின்றனர்,” என்றார் சாங் கெங் கியோங்.