மலேசியாவில் கொவிட்-19 தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 15 பில்லியன் ரிங்கிட் (S$4.93 பி.) மதிப்பிலான சிறப்பு உதவித் திட்டங்களை அந்நாட்டின் பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளார்.
‘மலேசியப் பொருளியல், மக்கள் பாதுகாப்பு உதவித் தொகுப்பு (பெர்மாய்)’ எனும் அந்த சிறப்பு உதவித் தொகுப்பின்கீழ் 22 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
ஏற்கெனவே நான்கு பொருளியல் ஊக்குவிப்புத் தொகுப்புத் திட்டங்களின் மூலம் 305 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவித் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது என்று திரு முகைதீன் தமது உரையின்போது குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றைக் களைவது, மக்கள் நலனைப் பாதுகாப்பது, வர்த்தகங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பது ஆகியவையே ‘பெர்மாய்’ சிறப்பு உதவித் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.
அனைத்து முன்கள மருத்துவப் பணியாளர்களுக்கும் ஒருமுறை மட்டும் 500 ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. அதேபோல, 14,000 சுற்றுலா வழிகாட்டிகள், 118,000 வாடகை கார், பள்ளி, சுற்றுலாப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் ஒருமுறை மட்டும் 500 ரிங்கிட் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 3,500 சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். தடுப்பூசி நிறுவனங்களுடன் மூன்று உடன்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதமர், முதல் தொகுதி தடுப்பூசிகள் அடுத்த மாதம் வந்தடையும் என்றும் சொன்னார்.
தேசிய அளவிலான கொரோனா தடுப்பூசித் திட்டத்திற்கு மூன்று பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு உள்ளது. அத்துடன், சுகாதார அமைச்சிற்குக் கூடுதலாக 900 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட இருக்கிறது.
மலேசியாவில் கிருமித்தொற்று ஏறுமுகத்தில் இருப்பதை அடுத்து, ஆறு மாநிலங்களிலும் மூன்று கூட்டரசுப் பகுதிகளிலும் இம்மாதம் 26ஆம் தேதி வரைக்கும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வங்கிக்கடனைக் காலந்தாழ்த்தித் திருப்பிச் செலுத்தும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு யூனிட்டிற்கு இரண்டு காசு என, இவ்வாண்டு ஜூன் மாதம் வரைக்கும் மின்கட்டணக் கழிவு வழங்கப்படும். இதனால் 9% வரையிலான கட்டணத்தை மிச்சப்படுத்தலாம் எனக் கூறப்பட்டது.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு மானியம், உதவித் திட்டம் நீட்டிக்கப்படவுள்ளது. அதன்படி, நடமாட்டக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் சில மாநிலங்களில் உள்ள 500,000 சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு 1,000 ரிங்கிட்டும் மற்ற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு 500 ரிங்கிட்டும் உதவித்தொகையாக வழங்கப்படும்.
முதன்முறையாக நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு நாலாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.