இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவில் காவடி ஊர்வலமும் பாத ஊர்வலமும் மீண்டும் இடம்பெறவுள்ளன.
இவ்வாண்டு தைப்பூசத் திருநாள் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
கொவிட்-19 சூழலில் 2021லும் 2022லும் தைப்பூசத் திருவிழா கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே நடைபெற்றது.
பாத ஊர்வலம் அப்போது நடைபெறவில்லை. அதே நேரம் காவடிகளுக்கு அனுமதி இல்லை.
பக்தர்கள் பால் குடங்களை மட்டும் செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கவே இந்தக் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன.
இவ்வாண்டு தைப்பூசத் திருநாளில் இந்தக் கட்டுப்பாடுகள் இருக்காது என்று இந்து அறக்கட்டளை வாரியம் இன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.
சிராங்கூன் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து டேங்க் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் வரையிலான வழக்கமான பாத ஊர்வலம் நடைபெறும்.
பிப்ரவரி 4ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு தொடங்கும் ஊர்வலம், 5ஆம் தேதி இரவு 11 மணி வரை நடைபெறும். அதாவது இரவு 11 மணிக்குள் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலுக்கு சென்றிடவேண்டும்.
இவ்வாண்டு தைப்பூச ஊர்வலத்தில் 30,000 பேர் கலந்துகொள்வர் என்றும் அவர்களில் சுமார் 10,000 பேர் பால் குடம் செலுத்துவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பால் குடம் செலுத்துவோர் சொந்தமாக அவற்றைத் தயாரித்துக் கொள்ளலாம் அல்லது ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் வழங்கும் பால்குடத்தைப் பயன்படுத்த முடிவு செய்யலாம்.
அத்துடன், 200 காவடிகளுக்கு அனுமதி உண்டு.
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்குள் செல்லும் நேரத்தைக் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பால் காவடிகள் தூக்கும் பக்தர்கள் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அல்லது ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு நேரடியாகச் சென்று அதற்கான அனுமதிச் சீட்டுகளை வாங்க வேண்டும்.
அலகுக் காவடி, ரதக் காவடி ஆகியவற்றுக்கான அனுமதிச் சீட்டுகளை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மட்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
பால்குடம் செலுத்துவதற்கு முன்பதிவு செய்ய, www.thaipusam.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.