ஏர் இந்தியா விமானங்களில் அமெரிக்கா செல்வோர், கோடைக்கால பயணப் பருவத்தின்போது விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதை எதிர்பார்க்கலாம்.
விமானப் பணியாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், அமெரிக்காவுக்கான விமானச் சேவைகளைக் குறைக்கும் நிலைக்கு ஏர் இந்தியா நிறுவனம் தள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு, அமெரிக்காவுக்கு வாரத்தில் விடப்படும் ஆறு விமானச் சேவைகள் குறைக்கப்படும்,” என்று ஏர் இந்தியா தலைமை நிர்வாகியும் நிர்வாக இயக்குநருமான கேம்பல் வில்சன் தெரிவித்தார்.
குறிப்பாக, அடுத்த மூன்று மாதங்களுக்கு டெல்லி-சான் ஃபிரான்சிஸ்கோ விமானச் சேவைகள் ரத்து செய்யப்படும். அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலம், நியூவார்க் நகருக்கான விமானச் சேவைகள் அடுத்த ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படும். மும்பை-நியூயார்க் விமானச் சேவைகள் மே மாதம் முழுவதும் இடம்பெறமாட்டா.
அமெரிக்காவுக்கு வாரந்தோறும் 47 விமானச் சேவைகளை ஏர் இந்தியா வழங்கி வருகிறது.
“பயணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத பயணப் பாதைகளில் விமானச் சேவைகளை நாங்கள் குறைக்கிறோம். அந்தப் பயணப் பாதைகளில் செல்வோர் மற்ற விமானங்களில் பயணம் செய்யலாம்.
“ஒவ்வொரு மாதமும் 500 விமானச் சிப்பந்திகளை நாங்கள் பணியில் அமர்த்தி வருகிறோம். ஏறக்குறைய 1,700 விமானிகள் விரைவில் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். அவர்களில் 10 விழுக்காட்டிற்கும் குறைவானோர் வெளிநாட்டு விமானிகளாவர்,” என்று வில்சன் கூறினார்.
விமானப் பணியாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, துபாய்க்கும் பேங்காக்கிற்கும் ஒடுக்கமான விமானங்களை இயக்குவதன் கட்டாயத்தில் ஏர் இந்தியா உள்ளது.
குளிர்காலப் பயணப் பருவத்தின் உச்சத்தின்போது நியூயார்க், வியன்னா, கோப்பன்ஹேகன், மிலான் ஆகிய நகர்களுக்கு விமானச் சேவைகளை ஏர் இந்தியா பிப்ரவரிக்குத் தள்ளிவைத்திருந்தது.
“கோடைக்காலத்தில் அமெரிக்காவுக்கு விமானச் சேவைகள் குறைக்கப்படுவதால், விமானப் பயணச்சீட்டுகளின் விலை உயர்வது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிறுவனங்களுக்குப் பயணிகள் மாறக்கூடும்,” என்று விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர் மோகன் ரங்கநாதன் குறிப்பிட்டார்.