முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது குற்ற வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மக்கள் வெவ்வேறு விதமாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது சரிதான் என அமெரிக்கர்களில் 49 விழுக்காட்டினர் கருதுவதாக ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் நடத்திய கருத்தாய்வில் தெரியவந்தது.
கடந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அமெரிக்கர்களின் கருத்து பிளவுபட்டிருந்தாலும் அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் 2024 வேட்பாளர் நியமனத்தில் திரு டிரம்ப்புக்கு வெற்றி கிடைப்பதுபோல ஆய்வின் முடிவு அமைந்திருந்தது.
அரசியல்வாதிகளில் குடியரசுக் கட்சியினர் இன்னும் திரு டிரம்ப்பின் பக்கமே உள்ளனர். இந்த வழக்கு அடுத்த ஆண்டு திரு டிரம்ப்புக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பை தங்களுக்கு அதிகப்படுத்தி இருப்பதாக 40% குடியரசுக் கட்சியினர் கூறினர். அந்தக் கட்சியினரில் 12% மட்டுமே தங்களது ஆதரவு திரு டிரம்ப்புக்கு இல்லை என்றனர்.
அதேநேரம், இந்த வழக்கு அதிபர் தேர்தலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என 38% தெரிவித்தனர். குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக யாரை முன்னிலைப்படுத்துவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 58 விழுக்காட்டினர் திரு டிரம்ப் பெயரை உச்சரித்தனர்.
குற்ற வழக்கு தொடுக்கப்பட்டதுமே தங்களது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என பெரும்பாலான அரசியல்வாதிகள் கருதலாம். ஆனால் திரு டிரம்ப் அவ்வாறு கருதவில்லை.
மேலும், அடுத்த அதிபர் தேர்தலுக்கு அவர் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார். அவர் தமது ஆதரவாளர்களிடம் மின்னஞ்சல் வாயிலாக நிதித் திரட்டில் ஈடுபட்டார்.
“உங்களுக்காகப் பாடுபடும் என் மீதான எதிர்த்தரப்பினரின் தாக்குதல் இது,” என்று வழக்கை குறிப்பிட்ட அவருக்கு ஒரு சில நாள்களிலேயே US$10 மில்லியன் (S$13.31 மில்லியன்) திரண்டது.