தைவான் அருகே போர்க்கப்பல்களையும் விமானங்களையும் சீனா மீண்டும் நேற்று அனுப்பியது. கலிஃபோர்னியாவில் அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் கெவின் மெக்கார்த்தியை தைவானிய அதிபர் சாய் இங்வென் சந்தித்த பிறகு சீனா இச்செயலில் இறங்கியது.
தைவான் தீவின் அருகிலுள்ள கடற்பரப்பில் மூன்று சீன போர்க்கப்பல்கள் குறுக்கிட்டதாகவும் தைவானிய ஆகாய தற்காப்பு எல்லை வழியாக சீனாவின் ராணுவ விமானமும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஹெலிகாப்டரும் ஊடுருவியதாகவும் தைவானின் தேசிய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
தைவானைக் குறிவைத்து போர்க்கப்பல்களை சீனா அனுப்பி இருப்பது இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை. கடந்த புதன்கிழமை விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று தைவானின் தென்கிழக்குக் கடற்பகுதியைக் கடந்து மேற்கத்திய பசிபிக் வட்டாரத்திற்குச் சென்றது.
லாஸ் ஏஞ்சலிஸில் திருவாட்டி சாயும் திரு மெக்கார்த்தியும் சந்திப்பதற்குச் சற்று நேரம் முன்னால் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்நிலையில், சீனாவின் பிரிக்கமுடியாத அங்கம் தைவான் என்று பெய்ஜிங் நேற்று தெரிவித்தது.
இதற்கிடையே, தைவானுக்கு எவ்வளவு சீக்கிரம் ஆயுதங்களை அனுப்ப முடியுமோ அந்த அளவுக்கு விரைவாக ஏற்பாடு செய்து வருவதாக மூத்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று கூறினார். அமெரிக்காவின் அனுமதியோடு பிற நாடுகளும் தைவானுக்கு ஆயுதங்களை விற்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
ஏவுகணையை எதிர்த்து முறியடிக்கும் ஆயுதம் உள்ளிட்ட தனக்குத் தேவைப்படும் அமெரிக்க ஆயுதங்களை விநியோகிப்பதில் தாமதம் காட்டப்படுவதாக கடந்த ஆண்டுமுதல் தைவான் கூறி வருகிறது.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுத் தலைவர் மைக்கல் மெக்கால் கூறுகையில், “சீனாவிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்நோக்கும் தைவானுக்கு ஆயுதங்கள் உடனடியாகத் தேவை,” என்றார்.
தைவான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “ஆயுத விநியோகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. விரைவான விநியோகத்திற்கு எங்களது அதிகாரத்துக்குட்பட்ட அனைத்தையும் செய்து வருகிறோம்,” என்றார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கான தைவானிய தூதர் திருவாட்டி சியாவ் பி-கிம் மீது மேலும் சில தடைகளை சீனா விதித்துள்ளது. அவரோ அவரது குடும்ப உறுப்பினர்களோ சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் தீவுக்குள் நுழையக்கூடாது என சீனாவுக்கான தைவானிய விவகார அலுவலகம் தடை விதித்துள்ளதாக தைவான் அரசாங்க ஊடகம் நேற்று கூறியது.