தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சையைக் கிளப்பும் வகையில் வெளியிட்டிருக்கும் கருத்துகளால் தமிழக அரசியல் களம் சூடாகி வருகிறது. அவருக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆளும் கட்சியான திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் போராட்டத்தை அறிவித்துள்ளன.
வரும் 12ஆம் தேதி புதன்கிழமை மாலை ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடைபெறும் என்று அவை நேற்று தெரிவித்தன.
ஆளுநர் ரவி நேற்று முன்தினம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்தியக் குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்று குறிப்பிட்டார்.
மேலும் ஒரு சர்ச்சைக் கருத்தாக அவர் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40% காப்பர் (தாமிர) தேவையைப் பூர்த்தி செய்தது. வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு அதனை மூடிவிட்டனர்,” என்று தெரிவித்தார்.
அவரின் இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் என தமிழகத்தின் பெரிய கட்சிகள் அனைத்தும் ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆளுநரைக் கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
“ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அவர் பேசிய இடம் முறையான இடமும் அல்ல. மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர் என்று உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு வழக்கின் தீர்ப்பில் சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு ‘தி கிரேட் டிக்டேட்டராக’ ஆளுநர் தம்மை நினைத்துக்கொள்ள வேண்டாம்,” என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தனது கடமைகளில் இருந்து தப்பித்தும் நழுவியும் வருவதை ஆளுநர் ரவி வழக்கமாக வைத் துள்ளார். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன,” என்றார்.
அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி எம்எல்ஏ கூறுகையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக, உணர்வுகள் காரணமாக கடந்த அதிமுக அரசு மூடியது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்துக்கு வெளிநாட்டுப் பணம் வந்தது என ஆளுநர் பதவியில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் கருத்து சொல்வது அவருக்கு அழகு அல்ல,” என்றார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் இந்த மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், “பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை மீறி நடந்துகொள்வதோடு ஜனநாயகத்தையும் காலில் போட்டு மிதிக்கின்றனர்,” என்றார்.