தன் தாயாருடன் படுக்கையில் தூங்கிக்கொண்டு இருந்த நான்கு மாத பெண் குழந்தை, படுக்கைக்கும் சுவற்றுக்கும் இடையில் இருந்த ஓர் இடுக்கில் விழுந்து, மூச்சுத் திணறி இறந்துவிட்டது.
நூர் அயில்யான் இமானி உதுமான் என்ற அந்தக் குழந்தை, அதன் தலை கீழே இருந்த நிலையில் கொஞ்ச நேரத்திற்கு அந்த இடுக்கில் மாட்டிக்கொண்டுவிட்டது என்று தாங்கள் கருதுவதாக சென்ற ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிரேதப் பரிசோதனையாளர்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.
குழந்தை அப்படி சிக்கிக்கொண்டதால் மூச்சுவிட முடியாமல் போய்விட்டது. ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு குழந்தை மரணம் அடைந்துவிட்டது.
மரணம் பற்றி விசாரணை நடத்திய மரண விசாரணை அதிகாரி, குழந்தையின் மரணம் துரதிருஷ்டவசமான ஒன்று என்று இம்மாதம் 3ஆம் தேதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அந்தக் குழந்தை தாயாருடன் மெத்தையில் தூங்கியது. படுக்கை இருந்த இடத்தில் இரண்டு சுவர்கள் சந்தித்தன.
இடது பக்க சுவற்றில் ஓர் இடைவெளி இருந்தது.
அது சுமார் 22 செ.மீ. அகலம், 25 செ.மீ. ஆழமான ஓர் இடுக்குபோல் இருந்தது. 2021 டிசம்பர் 20ஆம் தேதி காலை சுமார் 5 மணி இருக்கும்.
குழந்தை அழுததைக் கேட்ட தாயார் பால் காய்ச்சி குழந்தைக்கு கொடுத்தார். அதன் கையிலேயே போத்தலை கொடுத்தார்.
காலையில் 6 மணிக்கு எழுந்தபோது குழந்தையின் கால்கள் இடுக்கில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டு இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டு மருத்துவ வாகனத்தை அழைத்தார்.
குழந்தை காலை 7.45 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.