மலேசியாவின் சில பகுதிகளில் வெப்பம் மிகுந்த பருவநிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு புகை மூட்டமும் நிலவுகிறது.
ஆகையால் வெளியே செல்வதைப் பொதுமக்கள் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தபா ஆலோசனை கூறியுள்ளார்.
மலேசியாவின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசுகிறது. காற்றுத்தரம் மோசமடைந்து உள்ளது. மெட்மலேசியா என்ற பருவநிலை அமைப்பும் காட்டுவளம், சுற்றுப்புற பருவநிலை அமைச்சும் அவ்வாறே தெரிவித்து இருக்கின்றன.
சிலாங்கூரில் ஜோஹான் செத்தியா, கிளந்தான் மாநில தலைநகர் கோத்தா பாரு ஆகிய இடங்களில் காற்றுத் தரம் மோசமாக இருக்கிறது.
“கடும் வெப்பச் சூழலில் மக்கள் வெளியே செல்வதை, உடல் உழைப்பைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.
“பொருத்தமான முகக்கவசத்தை அணிந்துகொண்டு புகைமூட்டத்தை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
“வெளியே செல்லும்போது குடையுடன் செல்லுங்கள். காற்றில் புகையைக் கலக்கச் செய்யும் செயல்களை மக்கள் நிறுத்திவிட வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
“பலமுறை குளிக்கலாம். தரமான குளிர் சாதனம் மூலம் வீட்டில் தூசு, புகை புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்றாரவர்.