நோம்பென்: கம்போடியாவில் நடந்துவரும் 32வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் ஆண்கள் கிரிக்கெட் அணி ‘சிக்சஸ்’ போட்டியில் தங்கம் வென்றது.
தரப்பிற்கு ஆறு பேர், ஓர் இன்னிங்சுக்கு ஆறு ஓவர் என்ற வகையிலான ‘சிக்சஸ்’ போட்டியில் சிங்கப்பூர், கம்போடியா, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா என நான்கு அணிகள் போட்டியிட்டன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது முதல் போட்டியில் பிலிப்பீன்சிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப்போன சிங்கப்பூர் அணி, அடுத்த போட்டியில் இந்தோனீசியாவை 14 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்று நடந்த போட்டியில் கம்போடியாவை 26 ஓட்டங்களில் சிங்கப்பூர் தோற்கடித்தது. இவ்விரு அணிகளும் இரண்டு போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் கண்டு, தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன.
ஆயினும், ஓட்ட விகிதத்தில் முன்னிலை பெற்றதால் சிங்கப்பூர் அணி தங்கத்தைத் தட்டிச் சென்றது.
முன்னதாக நடந்த ஆடவருக்கான டி20 போட்டிகளில் சிங்கப்பூருக்கு வெண்கலம் கிடைத்தது. டி20, 50 ஓவர் போட்டிகளில் கம்போடியா தங்கம் வென்றது.
டி10 பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சிங்கப்பூரும் பிலிப்பீன்சும் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மோதவுள்ளன.