தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழில் மிகவும் புகழ்பெற்றதாகும்.
அந்த மாவட்டத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் புதுப்புதுத் தொழில்நுட்பங்களில் 25 புதிய பாணிகளில் புடவை உள்ளிட்ட பலவற்றையும் உருவாக்கியுள்ளனர்.
அனகாபுத்தூர் நெசவாளர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்து ஏற்கெனவே சாதனை படைத்துள்ளனர்.
தாவரங்களின் சாற்றையும் நாரையும் பயன்படுத்தி உடைகளை, உடுப்புகளைத் தயாரிப்பது இவர்களின் சிறப்பியல்பாகும். இவர்கள் தயாரித்தவை உலகளவில் மிகவும் புகழ்பெற்றவை.
தாய்லாந்தில் 7ஆவது அனைத்துலக வெட்டிவேர் நார்க் கருத்தரங்கு, கண்காட்சி மே 29ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்சியைத் தாய்லாந்து இளவரசியார் தொடங்கி வைத்து, சிறிய தொழில்முனைவோருக்குப் பரிசுகளை வழங்கினார்.
இளவரசியைப் பெருமைப்படுத்தும் வகையில் அனகாபுத்தூர் நெசவாளர்கள் மூவர் வெட்டிவேர் புடவையை நெய்து அதனை இளவரசிக்கு அன்பளிப்பாக வழங்க முடிவுசெய்தனர்.
அந்தப் புடவையைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று சிறு தொழில் வல்லுநர்கள் மூலமாக தாய்லாந்து இளவரசிக்கு அவர்கள் அன்பளிப்பாக வழங்கினர்.
அனகாபுத்தூரைச் சேர்ந்த மூன்று நெசவாளர்கள் மூன்றே நாள்களில் நேர்த்தியாக உருவாக்கிய அந்தப் புடவை, வெட்டிவேரில் இருந்து பெறப்படும் எண்ணெய், வெட்டிவேர் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டது; நறுமணம் வீசும் புடவை இது.