கனடாவின் சில பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் வடஅமெரிக்காவிலும் புகைமூட்டப் பிரச்சினை தலைதூக்கி உள்ளது.
புகைமூட்டம் காரணமாக நியூயார்க் நகரம் முழுவதுதிலும் காற்றுத்தரம் நேற்று (ஜூன் 6) மோசமடைந்தது. அங்கு சுதந்திர தேவி சிலையையும் வானுயுரக் கட்டடங்களையும் புகைமூட்டம் சூழ்ந்தது. மினசோட்டா முதல் மேசசூசெட்ஸ் வரை காற்றுத்தரம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கனடாவில் 400க்கும் மேற்பட்ட இடங்களுக்கு காட்டுத்தீ பரவியது. கிழக்கு கனடாவில் கியூபெக் நகர் காட்டுத்தீயால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டது. காட்டுத்தீ, கோடைக்காலம் முழுவதும் நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காட்டுத்தீ குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தாம் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்தார்.
திங்கட்கிழமை நிலவரப்படி, காட்டுத்தீ காரணமாக கனடாவில் ஏறக்குறைய 26,000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாண்டு இதுவரை கனடாவில் 2,200க்கும் அதிகமான காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தீயணைப்புத் துறை தெரிவிக்கிறது.