லண்டன்: பெனால்டி வாய்ப்புகளில் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி ‘கம்யூனிட்டி ஷீல்ட்’ கிண்ணத்தை ஆர்சனல் ஏந்தியது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்ட நிலையில் ஆட்டம் பெனால்டிகள் வரை சென்றது.
ஆர்சனலின் வெற்றி குறித்து பேசிய நிர்வாகி மிகெல் ஆர்டேட்டா, “நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம். உலகிலேயே ஆகச் சிறந்த குழுவைத் தோற்கடித்து வெம்ப்ளி அரங்கில் கிண்ணத்தை வெல்வதைவிட வேறு எதுவும் சிறப்பாக இருக்க முடியாது,” என்று கூறினார்.
மேன்சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா கூறுகையில், “நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இன்று நாங்கள் வெல்ல விரும்பினோம். மேன்சிட்டி சிறந்த குழு என்றாலும் சில வேளைகளில் நாங்கள் தோற்க நேரிடுகிறது,” என்றார்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக், சாம்பியன்ஸ் லீக், எஃப்ஏ கிண்ணத்தை ஒரே பருவத்தில் ஏந்திய இரண்டாவது இங்கிலாந்துக் குழு என்ற பெருமையைக் கடந்த பருவத்தில் மேன்சிட்டி பெற்றது.