கிளமெண்டி எம்ஆர்டி நிலையத்தில் வியாழக்கிழமை மின்படிக்கட்டுகளில் நின்றுகொண்டிருந்த மூவர் விழுந்து காயமுற்றனர்.
பொறியாளர்கள் மின்படிக்கட்டைப் பரிசோதித்துப் பார்த்ததில் அதன் அமைப்பில் கோளாறு எதுவும் தென்படவில்லை எனக் கட்டட, கட்டுமான ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மின்படிக்கட்டுகள் திடீரென எதிர்த்திசையில் செல்லத் தொடங்கியதாகக் கூறப்பட்டதற்குப் பதிலளித்த ஆணையம், சம்பவத்தின்போது கண்காணிப்புக் கருவியில் பதிவான காணொளியைப் பார்த்ததில் மின்படிக்கட்டுகள் எதிர்த்திசையில் சென்றதாகத் தெரியவில்லை என்றது.
எண் 3150 காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து காலை 9.30 மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. காயமுற்ற மூவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ் தலைவர் லாம் ஷியு காய், வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் குறித்து ரயில் நிலைய ஊழியர்களுக்கு தகவல் கிடைத்ததாகக் கூறினார்.
“பயணி ஒருவர் நிலைதடுமாறி, அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த இருவர் மீது விழுந்தார். எமது ரயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து உதவிக்கரம் நீட்டினர்,” என்றார் அவர்.
எஸ்எம்ஆர்டியின் மின்படிக்கட்டு பழுதுபார்ப்பு ஒப்பந்ததாரர் முழுமையான பரிசோதனை நடத்தியதாகவும் மின்படிக்கட்டில் கோளாறு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியதாகவும் திரு லாம் கூறினார். அதன் பின்னர் மின்படிக்கட்டுகள் மீண்டும் இயங்கத் தொடங்கின.
மின்படிக்கட்டுகளில் நிற்கும்போது கைப்பிடியைப் பிடித்துக்கொள்ளுமாறு பயணிகளிடம் திரு லாம் வலியுறுத்தினார்.