அகமதாபாத்: உலகக் கிண்ண கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
அந்த எதிர்பார்ப்புக்குரிய ஆட்டம் சனிக்கிழமை (அக்டோபர் 14) குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டியின்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது.
அகமதாபாத் நகரிலும் வடக்கு குஜராத் மாவட்டங்களிலும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் ஆங்காங்கே லேசாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் இந்தப் போட்டியை நேரடியாகக் காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கிண்ணப் போட்டிகளின் தொடக்கத்தில் பாரம்பரியமாக நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் எதுவும் பிரம்மாண்ட முறையில் நடத்தப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் பெரிய அளவில் கலைநிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பிற்பகல் 12.30 மணிக்குத் தொடங்கும் கலைநிகழ்ச்சிகளில் பாலிவுட் பிரபலங்களான அர்ஜித் சிங், சுக்விந்தர் சிங், சுனிதி சவுகான், நேஹா கக்கர் மற்றும் சங்கர் மகாதேவன் பங்கேற்று இசை, நடன விருந்து படைக்க உள்ளனர்.
இதற்கிடையே, கிரிக்கெட் விளையாட்டரங்கிற்குள் செல்ல ரசிகர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பணப்பை, கைப்பேசி, தொப்பி மற்றும் மருந்து, மாத்திரைகளை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. குடிதண்ணீரும் மருத்துவ முதலுதவியும் குஜராத் கிரிக்கெட் சங்கம் சார்பில் வழங்கப்படுகின்றன.
லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வருவார்கள் என்பதால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு உள்ளது. 7,000 குஜராத் காவல்துறையினரும் 4,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.