தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்.
தற்போது அவர் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் பின்னணி குரல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
‘ராக்கி’ படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ‘டீசர்’ தவிர வேற எந்த அப்டேட் படக்குழுவினர்கள் தரப்பில் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தனுஷ் சமூக ஊடகங்களில் “கேப்டன் மில்லர் பாடல்களை கேட்க சற்று பொறுமையாக காத்திருங்கள்” என ஒரு படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
கையில் உடுக்கையை ஏந்தியபடி தனுஷ் நிற்க அவருக்குப் பின்னால் உள்ள சுவரில், கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் புகைப்படமும் கம்யூனிஸ்ட் சின்னமும் வரையப்பட்டுள்ளது.
அந்த சுவரில் ‘புரட்சி ஓங்குக’ எனும் வாசகமும் அடங்கியிருக்கிறது. இது தற்போது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மேலும் கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ள இந்தப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது.
இந்த படத்தில் ‘அருவி’ அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இவரின் காட்சிகள் சுதந்திரத்துக்கு முந்தைய கதையில் வருகிறது என்றும் ‘கேப்டன் மில்லர்’ இரண்டாம் பாகம் உருவானால் அதில் இவரது பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
படத்தில் தனுஷ் இலங்கையை சேர்ந்த போராளியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் படங்களின் தயாரிப்பு பணிகள் பெரிய அளவில் ரசிகர்கள் இடையில் கவனிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
இதை’கேப்டன் மில்லர்’ படம் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் அருணுக்கு இந்தப் படம் பெரிய வாய்ப்புகளைக் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.