சென்னை: சேலம் - சென்னை விமானச் சேவை கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி 2021ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் அந்தச் சேவையைத் தொடங்க வேண்டும் என்று மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து சென்னை - சேலம் விமானச் சேவை 31 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. சென்னையில் இருந்து சேலம் சென்ற முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, திரைப்பட நடிகை நமீதா, அவரது கணவர் உள்பட 43 பேர் சேலம் வந்தனர்.
அவர்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகத்தினரும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்தீபனும் மலர்க்கொத்தும் இனிப்பும் கொடுத்து வரவேற்பளித்தனர். அந்த விமானம் 64 பயணிகளுடன் சேலத்தில் இருந்து மீண்டும் சென்னை திரும்பியது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் காலை 11:30 மணிக்குச் சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு 12.30 மணிக்குச் சேலம் வந்தடையும் எனவும் அதே விமானம் சேலத்தில் இருந்து 12:50க்கு புறப்பட்டு 1:45 மணிக்குச் சென்னை சென்றடையும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.