சில்க்யாரா: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விழுந்ததில் கடந்த எட்டு நாள்களாக 41 தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கைகொடுக்காத நிலையில், புதிய திட்டங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றன.
இந்நிலையில், சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு சமைத்த உணவை அனுப்பவும் அவர்களுடன் தொடர்புகொள்ள தொலைபேசி இணைப்பை அமைக்கவும் மீட்புப் பணியாளர்கள் முயன்று வருகின்றனர்.
ஏற்கெனவே, குழாய் மூலம் தொழிலாளர்களுக்கு வெளிச்சம், உயிர்வாயு, உலர்ந்த உணவுப்பொருள்கள், தண்ணீர், மருந்து ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இனி இரண்டாவது குழாய் ஒன்றின் வழியாக சமைத்த உணவைத் தொழிலாளர்களுக்கு அனுப்பிவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இடிபாடுகளைத் துளையிடும் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய குழாய் 60 மீட்டர் நீளமுடையதாக இருக்கும் என்றும் அதில் 42 மீட்டர் தயாராகிவிட்டது என்றும் சிறப்பு அதிகாரி திரு பாஸ்கர் குல்பே கூறினார்.
“சுரங்கப்பாதையில் மாட்டிக்கொண்டிருக்கும் 41 உயிர்களைக் காப்பாற்றுவதே எங்கள் இலக்கு. இந்த குழாய்கள் மூலம் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை அனுப்பலாம்,” என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அந்த 4.5 கிலோமீட்டர் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் மேல் விவரங்கள் வெளியடவில்லை.
நவம்பர் 12ஆம் தேதியன்று இரவு நேரத்தில் கிட்டத்தட்ட 50லிருந்து 60 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் வேலை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது.
நுழைவாயிலுக்கு அருகில் இருந்த சிலர் தப்பி ஓடினர்.