தேவைக்கேற்பக் கட்டப்படும் (பிடிஓ) வீட்டுத் திட்டத்தின்கீழ் பிடோக் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 250 சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகள் டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளன.
வாழ்வதற்குத் துணைபுரியும் அம்சங்கள் கொண்ட இந்த வீடமைப்புத் திட்டம் குறித்து நவம்பர் 30ஆம் தேதியன்று கூடுதல் தகவல்கள் வெளியிடப்பட்டன.
சாய் ச்சீ பகுதியில் உருவாகிவரும் ஒரு பெரிய திட்டத்தின் ஓர் அங்கம்தான் இந்த வீட்டுத் திட்டம். மூவறை, நாலறை, ஐந்தறை வீடுகள் அடங்கிய இத்திட்டத்தின்கீழ் வீடு வாங்குவோர், மூன்றாண்டு மூன்று மாதங்கள் முதல் மூன்றாண்டு ஏழு மாதங்கள் வரை காத்திருக்கக்கூடும்.
மூன்றாவது முறையாக இந்த வாழ்வதற்குத் துணைபுரியும் அம்சங்கள் கொண்ட பொது வீடமைப்புத் திட்டம் தொடங்கவிருக்கிறது.
முதல் திட்டம் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முடிவடைவதாகவும் இரண்டாவது திட்டம் குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் 2028ஆம் ஆண்டில் முடிவடைவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமுறைகளுக்கு இடையே பிணைப்பை வளர்ப்பதற்காக சாய் ச்சீ கிரீன் பிடிஓ திட்டத்தின்படி மொத்தம் 1,234 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
இந்த வீடுகளில் பிடோக்கின் சமூகப் பராமரிப்பு வீடுகளும் அடங்குவதாக தேசிய வளர்ச்சி அமைச்சு, சுகாதார அமைச்சு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆகியவை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மூத்தோருக்கு உதவக்கூடிய கைப்பிடிகள், சக்கர நாற்காலியில் பயன்படுத்தக்கூடிய, வழுக்காத தரைக்கற்கள் கொண்ட குளியலறைகள், சக்கர நாற்காலிக்கு ஏற்றவாறு அமைந்த வாசல் கதவுகள், கதவுகளுக்கு அருகே அமைக்கப்பட்ட இருக்கை போன்ற வசதிகள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளன.
ஒவ்வொரு வீட்டின் பரப்பளவும் 32 சதுர மீட்டர். சுவரில் அமைக்கப்பட்ட அலமாரி, பொருள்கள் வைக்கும் இடங்கள், தயார்நிலையில் உள்ள சமையலறை போன்ற வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதால் முதியவர்கள் குறைந்தபட்ச வீட்டுப் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்டு நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
அடிப்படைச் சேவைத் தொகுப்புத் திட்டத்திற்கு இந்தச் சமூகப் பராமரிப்பு வீட்டுக் குடியிருப்பாளர்கள் பதிந்துகொள்ள வேண்டியிருக்கும். 24 மணிநேர அவசர சேவைக் கண்காணிப்பு, அடிப்படைச் சுகாதாரப் பரிசோதனைகள் போன்ற சேவைகளை அவர்கள் பெற முடியும்.
இத்தொகுப்புத் திட்டத்துக்குக் குடியிருப்பாளர்கள் ஆண்டுக்குச் சுமார் $2,000 கட்டணம் செலுத்துவர்.
ஒவ்வொரு மாடியிலும் வசிப்போர் ஒன்றுகூடிப் பேசுவதற்கும் சமூக மேலாளர் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் சமூக ஒன்றுகூடல் இடம் அமைக்கப்படும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வீடுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சமூகப் பராமரிப்பு புளோக், வீடு, சமூக ஒன்றுகூடல் இடம் ஆகியவற்றின் முப்பரிமாண மாதிரிகளும் வீட்டின் மாதிரி வடிவமும் வீவக ஹப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
காட்சிக்கூடத்திற்குச் செல்ல விரும்பும் முதியவர்கள் https://go.gov.sg/reg-cca-exhibition-2023 என்ற இணைப்பில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.