‘ஆட்டிசம்’ உள்ள ஒன்பது வயது சிறுவனுக்குக் கல்வி, நடத்தை சார்ந்த சிகிச்சை அளித்து வந்தவருக்கு, சிறுவனைக் காயப்படுத்திய குற்றத்துக்காக மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுவனுக்கு நான்கு வயதிலிருந்தே கடுமையான ‘ஆட்டிசம்’. அத்துடன் கருத்தை வெளிப்படுத்தும் பேச்சாற்றலும் சிறுவனுக்கு இல்லை.
ஒரு வயது மகனுக்குத் தாயாகவும் தற்போது கர்ப்பிணியாகவும் உள்ள நூர் அமிரா முகம்மது ரஸாலி, 33, சிறுவனை அடித்துக் காயப்படுத்திய குற்றத்தை டிசம்பர் 12ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டார்.
நூர் ஐந்தாண்டுகளாக கல்வி, நடத்தை சார்ந்த சிகிச்சை அமர்வுகளை சிறுவனுக்காக நடத்தி வந்தார்.
மகனின் முதுகிலும் கையிலும் காயங்கள் இருந்ததை 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிறுவனின் தாயார் கவனித்தார்.
அதையடுத்து, ஜூலை 28ஆம் தேதியன்று மகனின் இடது கையில் சிவப்புநிறத் தழும்புகள் இருப்பதைப் பார்த்தார்.
சிகிச்சை அமர்வுகள் சிறுவன் வசித்த வீட்டின் ஓர் அறையில் நடப்பதால், கண்காணிப்பு கேமரா ஒன்றை அங்கே பொருத்தச் சிறுவனின் தாயார் முடிவெடுத்தார்.
சிகிச்சை அமர்வு ஜூலை 29ஆம் தேதியன்று நடந்ததை அடுத்து சிறுவனின் தாயார் கண்காணிப்பு கேமராவிலிருந்த பதிவைப் பார்த்தார்.
அதில், சிறுவனின் இடது கையையும் வாயையும் அடித்ததுடன் சிறுவனின் கழுத்தைப் பிடித்து நெற்றியையும் நூர் அடித்ததாகத் தெரிந்தது.
காவல்துறையிடம் சிறுவனின் தாயார் அன்றைய தினமே புகார் அளித்தார்.