லண்டன்: பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரன் இந்த வாரம் ஜோர்தானுக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொள்வார். அவர் அங்கு, காஸாவில் நிலையான போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான ஏற்பாடுகளை வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சு டிசம்பர் 20ஆம் தேதி தெரிவித்தது.
பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முன்னேற்ற முயற்சிகள் எடுக்கவும், இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் அவர், பிரிட்டனின் மத்திய கிழக்குக்கான துணை அமைச்சர் தாரிக் அஹ்மத்துடன் பயணத்தை மேற்கொள்வார்.
திரு கேமரன் ஜோர்தானுக்குச் சென்று, அதன் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாடியைச் சந்திப்பார். எகிப்தில், அவர் எகிப்து-காஸா எல்லைக்கு அருகிலுள்ள அல் அரிஷுக்குச் சென்று, காஸாவுக்கு அனுப்பப்படும் பிரிட்டனின் மனிதாபிமான உதவிகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பார்வையிடுவார்.
டிசம்பர் 17ஆம் தேதி அன்று, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையில் குடியேறிகள் மேற்கொள்ளும் வன்முறையைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பங்காளித்துவ நாடுகள் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தன.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமானவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று திரு கேமரன் சென்ற வாரம் அறிவித்தார். இதேபோன்ற ஒரு திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியமும் செயல்படுத்துகிறது.