இந்தியாவின் கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்துடன் தொடர்பில் அங்குள்ள மாணவர் விடுதி பாதுகாவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் தொடர்பில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமுதாய நலத்துறை மாணவர் விடுதியில் சேர்ந்த அந்த மாணவி, உறவினரைப் பார்க்க அடிக்கடி வெளியே சென்று வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அவர் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது கூட அவர் கர்ப்பமான செய்தி வெளியாகவில்லை.
அந்த மாணவி எட்டாம் வகுப்பு படித்தபோது கடந்த ஆண்டு மாணவர் விடுதியில் சேர்ந்தார்.
ஒரே பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருடன் அந்த மாணவிக்குத் தொடர்பு இருந்ததாக இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்தோர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
எனினும், கல்வியை முடித்தவுடன் அந்த மாணவர் டிரான்ஸ்ஃபர் சான்றிதழ் பெற்று பெங்களூருக்கு இடம்பெயர்ந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துரைத்த சமுதாய நலத்துறை கூட்டு இயக்குநர் எஸ்.கிருஷ்ணப்பா, “சற்று காலமாக அந்த மாணவி விடுதிக்கு வரவே இல்லை. வயிற்றுவலி ஏற்பட்டதாகக் கூறி அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அவர் கர்ப்பமாக இருந்தது அப்போதுதான் தெரியவந்தது.
“இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துகிறோம். பின்னர் விசாரணை அறிக்கையை அரசாங்கத்திடம் நாங்கள் சமர்ப்பிப்போம்,” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாணவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.