புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர் களின் ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பண்டிகை வேளையில் இலங்கை கடற்படை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் 250 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்று இருந்தனர்.
யாழ்ப்பாணம் கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்து சேர்ந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்தனர்.
இதையடுத்து ஐந்து விசைப் படகுகளை பறிமுதல் செய்த கடற்படையினர், விசாரணை என்ற காரணத்தைக் கூறி 32 மீனவர்களை கைது செய்தனர்.
கைதான மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப் பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.