சென்னை: தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைக் கண்டித்து வரும் 10ஆம் தேதி பாம்பனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், கடந்த 3ஆம் தேதி இராமேஸ்வரம், தங்கச்சிமடத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, அவர்களுடைய இரண்டு நவீன மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த கடற்கரையில் 13 விழுக்காட்டு கடற்கரை பகுதி தமிழகத்தில் இருக்கிறது. 1,076 கி.மீ. நீளம் கொண்ட தமிழக கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீனவச் சிற்றூர்களும், லட்சக்கணக்கான மீனவ மக்களும் காலம் காலமாக மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
பாக் நீர் இணைப்புப் பகுதியில் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் அவர்களுடைய ரூ.25 லட்சம் முதல் ரூ.1கோடி வரையிலான விலையுயர்ந்த படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் வழக்கமாகிவிட்டது.
இலங்கை கடற்படையினரால் இதுவரை 150 நவீன மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய பாஜக அரசுக்கு பல்வேறு மீனவ அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன. ஆனால், மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2023ஆம் ஆண்டில் 240 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் காலம் காலமாக எந்தக் கடல் பகுதியில் மீன்பிடித்தார்களோ, அந்த உரிமையை பாதுகாத்து மீட்டெடுக்காமல், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உதவி செய்வதாகவும், நீல புரட்சி திட்டத்தை ஒன்றிய பாஜக அறிவித்திருப்பதனாலும் மீனவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் கே.எஸ்.அழகிரி.
கடல் தாமரை மாநாடு நடத்தி மீனவர்களுக்கென தனி அமைச்சகம் தொடங்கப்படும் என அறிவித்து, 10 ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றாத பாஜக அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து சீரழித்து வருவதையும், இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தின் மூலம் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சிறைவாசம் தொடர்கதையாகி வருவதையும், கண்டிக்கிற வகையில் பாஜக அரசுக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில், வருகிற 10.2.2024 சனிக்கிழமை காலை 10 மணியளவில் இராமேஸ்வரத்தின் பாம்பன் பேருந்து நிலையத்தின் முன்பு, பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கே.எஸ்.அழகிரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.