மணிலா: பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 37 ஆனதாக அந்நாட்டு அதிகாரிகள் பிப்ரவரி 11ஆம் தேதி தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருப்போரை உயிருடன் மீட்கும் நம்பிக்கை குறைந்தபோதும் தேடல், மீட்புப் பணியாளர்கள் தங்கள் பணியைத் தொடர்வதாகக் கூறப்பட்டது.
மாகோ நகரில் உள்ள தங்கச் சுரங்கத்திற்கு அருகே உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 6ஆம் தேதி இரவு நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் வீடுகளும் சுரங்க ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் புதையுண்டன.
முன்னதாக 28 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது அந்த எண்ணிக்கை 37க்கு உயர்ந்திருப்பதாகவும் மேலும் 32 பேர் காயமடைந்ததாகவும் மொத்தம் 63 பேரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டது.
மீட்புப் பணியில் 300க்கு மேற்பட்டோர் ஈடுபட்டாலும் கனமழை, சேறு, மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஆகியவற்றால் அவர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பிப்ரவரி 11ஆம் தேதி காலை மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.