அன்றாடம் வீட்டில் புழங்கும் பொருள்களைக்கொண்டு மறுசுழற்சி முறையில் அறிவியல் நுட்பம் கொண்ட புத்தாக்க விளையாட்டுப் பொருள்களை மாணவர்களே உருவாக்க வழிகாட்டி வருகிறார் பள்ளி ஆசிரியரான ப. கண்மணி, 32.
இவர் ஸீஷான் தொடக்கப்பள்ளியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் மற்றும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூர் அறிவியல் நிலையத்துடன் சோனி நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக நடத்தும் ‘சோனி கிரியேட்டிவ் சயின்ஸ் அவார்ட்ஸ்’ போட்டிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களை தயார்ப்படுத்தியுள்ளார் இவர்.
மாணவர்களை இப்போட்டிக்காகக் கவனத்துடன் தயார்ப்படுத்தியதற்காக 2023ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான ‘புளூ ரிப்பன்’ விருதினை இவர் பெற்றுள்ளார்.
“இந்தப் போட்டிக்காக ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களை தயார்ப்படுத்தும் விதமாக பள்ளி அளவில் போட்டி ஒன்று நடத்தப்படும். எங்கள் பள்ளியின் அறிவியல் துறைத் தலைவர் தலைமையில் அனைத்து அறிவியல் ஆசிரியர்களும் ஒன்றுகூடி, புத்தாக்க வழிமுறைகளைக் கலந்தாலோசிப்போம்,” என்று கூறினார் திருவாட்டி கண்மணி.
தொடக்கநிலை ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் இப்போட்டியில் பங்குபெறுவர். குழுக்களாக இணைந்து தங்கள் யோசனைகளைக் கூறுவர். அவற்றை மேம்படுத்த ஒவ்வொரு குழுவினருடனும் நீண்ட நேரம் ஆலோசிப்பேன் என்று ஆசிரியர் கண்மணி தெரிவித்தார்.
வீட்டில் இருக்கும் பழைய அட்டைப்பெட்டிகள், நெகிழிக் குடுவைகள், பேனாக்கள், மரச்சாமான்கள், சணல், நூல் போன்ற பொருள்களைக்கொண்டு புத்தாக்கச் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கின்றனர் இப்பள்ளி மாணவர்கள்.
மனித உடற்பாகங்களை விளக்கும் காட்சிப் படைப்பு, அட்டைப்பெட்டிகளைக் கொண்டு அறிவார்ந்த விளையாட்டுகள், புத்தாக்க மழைநீர் சேகரிக்கும் வழிமுறைகள், நீரைத் தூய்மையாக்கும் பரிசோதனை முறை உள்ளிட்ட பல்வேறு புத்தாக்கத் திட்டங்களையும் பொருள்களையும் மாணவர்கள் செய்துள்ளனர்.
இளம் வயதிலிருந்தே குழந்தைகளிடம் நேரம் செலவழிப்பதை விரும்பிய திருவாட்டி கண்மணி, தான் ஆசிரியர் பணியைத் தேர்ந்து எடுக்க முக்கியக் காரணங்களுள் அதுவும் ஒன்று என்றார்.
இக்காலப் பிள்ளைகளின் அறிவுக்கூர்மை தன்னைப் பலமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட இவர், “தொடக்கப்பள்ளி பயிலும் வயதிலுள்ள மாணவர்களை நன்னெறிகளுடன் ஆளாக்குவதே நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு வித்திடும். அவ்வகையில் இப்பணி ஒவ்வொரு நாளும் எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது,” என்று கூறினார்.