புதுடெல்லி: காலை ஒன்றுகூடலுக்கு வராத சுமார் 100 முதலாம் ஆண்டு மாணவர்களை இந்தியாவின் செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி தற்காலிகமாக நீக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோரை அழைத்து வராவிட்டால் அவர்கள் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்றும் அந்தக் கல்லூரி எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்ற மாதம் நடைபெற்ற காலை ஒன்றுகூடல்களில் பங்கேற்காத 100க்கும் அதிகமான மாணவர்களுக்கு இம்மாதம் நான்காம் தேதியன்று செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியிடமிருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டதற்கு ஏற்றவாறு அந்த மாணவர்கள் கல்லூரி முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்துகொள்ளவில்லை என்றும் அதனால் அவர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டதுடன் இரண்டாம் காலாண்டு தேர்வுகளை எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக முடிவை மாற்றிக்கொள்ளுமாறு மாணவர்களும் ஆசிரியர்களும் கல்லூரி முதல்வர் ஜான் வர்கீசைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.