நைஜீரியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விலங்குப் பராமரிப்பாளர் ஒருவரை, கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக அவர் வளர்த்த ஒரு சிங்கமே கொன்றது.
ஒபாஃபெமி அவலோவோ பல்கலைக்கழகத்திலுள்ள விலங்கியல் தோட்டத்தின் பொறுப்பாளராக இருந்து வந்தார் ஒலாபோட் ஒலாவுயி.
இந்நிலையில், அண்மையில் அங்குள்ள சிங்கங்களுக்கு ஒலாவுயி உணவளித்துக் கொண்டிருந்தபோது அவற்றில் ஒன்று அவரைத் தாக்கிக் கொன்றதாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, அச்சிங்கம் கொல்லப்பட்டதாக பிபிசி செய்தி கூறுகிறது.
விலங்குநலத் தொழில்நுட்ப வல்லுநரான ஒலாவுயி, அந்தக் கல்வி நிலைய வளாகத்தில் ஒன்பது ஆண்டுகளுக்குமுன் பிறந்த சிங்கங்களைப் பேணி வளர்த்து வந்தார்.
“ஆனால், சிங்கங்களுக்கு அவர் உணவளித்துக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஆண் சிங்கம் ஒன்று அவரைத் தாக்கிக் கொன்றது,” என்று பல்கலைக்கழகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எதற்காகச் சிங்கம் ஒலாவுயியைத் தாக்கியது என்று தெரியவில்லை என்றும் அப்பேச்சாளர் சொன்னார்.
தென்மேற்கு மாநிலமான ஓசனில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான படங்களை நைஜீரியர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.