புதுடெல்லி: இவ்வாண்டின் இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல் ) டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு வெற்றியாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மார்ச் 22ஆம் தேதி மோதவிருக்கிறது.
முந்திய ஆண்டில் முதலிரு இடங்களைப் பிடித்த அணிகளே அதற்கடுத்த ஆண்டின் முதல் போட்டியில் பொருதிவந்த வழக்கம் இம்முறை மாற்றப்பட்டுள்ளது.
இம்முறை சென்னை அணி தனது முதல் போட்டியைச் சென்னை சேப்பாக்கம் அரங்கில் விளையாட இருக்கிறது.
இப்போதைக்கு முதல் 17 நாள்களில் இடம்பெறும் போட்டிகளின் அட்டவணையை மட்டுமே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, முழுமையான அட்டவணை வெளியிடப்படும்.
பொதுத் தேர்தல் இடம்பெறவிருந்தாலும் இம்முறை அனைத்துப் போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2009ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர் முழுவதும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அதன்பின் 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காரணமாக, தொடரின் ஒரு பகுதி ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடத்தப்பட்டது.
இருப்பினும், 2019ல் பொதுத் தேர்தல் நடந்தபோதும் ஐபிஎல் தொடர் முழுமையாக இந்தியாவிலேயே நடத்தப்பட்டது.
இம்முறை இறுதிப் போட்டி மே மாத கடைசி வாரத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், அடுத்ததாக ஜூன் 2ஆம் தேதி டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன. நியூயார்க்கில் ஜூன் 5ஆம் தேதி நடக்கவுள்ள தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.