வயதான ஊழியர்களுக்கு எதிர்கால வேலை திட்டத்தை அமைக்கவும் அவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பை உருவாக்கவும் வழங்கப்படும் மானியத்தை 480 நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் மானியங்களை நிறுவனங்கள் வாங்கியதாக சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
வயதான ஊழியர்களுக்கு வழங்கும் மானியத்தை முதலாளிகள் சம்மேளனம் நிர்வாகம் செய்கிறது.
மானியத்தின் மூலம் கிட்டத்தட்ட 3,200 மூத்த ஊழியர்கள் பயனடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கவும் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
மானியத்திற்காக விண்ணப்பிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் உணவு பானம், சில்லறை வர்த்தகம், சுத்தம் செய்யும் பணி, பாதுகாப்பு பணி போன்ற துறையைச் சேர்ந்தவர்கள் என்று சம்மேளனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 75 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் 6,300க்கும் அதிகமான நிறுவனங்களில் 50,000க்கும் அதிகமான வயதான ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிர்கால வேலை திட்ட பயிற்சியும், பகுதி நேர வேலை வாய்ப்பை உருவாக்கவும் நிறுவனங்களிடம் பேசி வருவதாக மனிதவள அமைச்சு கூறியது.