கவிப்பேரரசு வைரமுத்துவின் 39வது நூலான ‘மகா கவிதை’ நூலின் அறிமுக விழா, சிங்கப்பூரில் இம்மாதம் 9ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நூலாசிரியர் வைரமுத்து நேரில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இவ்விழாவினை எழுமின் அமைப்பு, 8 பாயிண்ட் எண்டர்டைன்மெண்ட், 3 டாட் மூவீஸ் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
மேலும் தமிழர் பேரவை, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை, தமிழ் மொழிப் பண்பாட்டுக் கழகம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், கவிமாலை சிங்கப்பூர், பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், மக்கள் கவிஞர் மன்றம், மாதவி இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகள் ஆதரவு அமைப்புகளாக இணைந்துள்ளன.
இந்நிகழ்விற்கு சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன முன்னாள் உறுப்பினர் இரா.தினகரன் தலைமை வகிக்கவுள்ளார்.
மலேசிய இந்திய காங்கிரசின் துணைத் தலைவரும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய முன்னாள் அமைச்சருமான எம். சரவணன் முன்னிலை வகிக்கவுள்ளார்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணை விரிவுரையாளர் முனைவர் சரோஜினி செல்லகிருஷ்ணன் நூலின் ஆய்வுரை வழங்க, மலேசியத் தொலைக் காட்சிப் புகழ், அனைத்துலக இலக்கியச் சொற்பொழிவாளர் வழக்கறிஞர் சி.பாண்டிதுரை நிகழ்வினை தொகுத்து வழங்கவுள்ளார்.
நிலம், நீர், தீ, வளி, வெளி ஆகிய ஐம்பூதங்களைப் பற்றிய ஐந்து நெடுங்கவிதைகளின் பெருந்தொகுப்பான இந்த கவிதை நூலினை வைரமுத்து 30 மாத காலத்தில் படைத்துள்ளார்.
இந்நூலினை இவ்வாண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் வெளியிட்டுச் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நூலினை மலேசியாவின் தமிழ்ச் சங்கத்தின் 12 பேர் அடங்கிய தனிக்குழுவினர் ஆராய்ந்து தெரிவு செய்ததன் அடிப்படையில், தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப்பேராயமும் இணைந்து ‘பெருந்தமிழ்’ விருது வழங்கத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
இவ்விழாவிற்கு அனுமதி இலவசம். அரங்கில் இந்நூல் 25 வெள்ளி விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.