பேங்காக்: தாய்லாந்தில் சூதாட்டக் கூடங்களை அனுமதிக்க புதிய சட்ட மசோதா ஒன்றை இயற்றிவருவதாக அந்நாட்டு பிரதமர் சிரேத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.
மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தால் அது பல வேலை வாய்ப்புகளையும் உள்ளூர் வருமானத்தைப் பெருக்கும் என்று அவர் வெள்ளிக்கிழமையன்று கூறினார்
தாய்லாந்தில் சூதாட்டக் கூடங்கள் அமைப்பது சட்டவிரோதமானது. அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள குதிரைப் பந்தயங்கள், லாட்டரி சீட்டுகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
தென்கிழக்காசியாவின் இரண்டாவது ஆகப்பெரிய பொருளியல் நாடாகத் திகழும் தாய்லாந்துக்கு சூதாட்டக் கூடங்கள் மூலம் முதலீடு மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த பின்னணிகளை அறிக்கையாக தாய்லாந்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தாய்லாந்தில் சூதாட்டக் கூடங்கள் அனுமதிக்கப்பட்டால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை அது ஈர்க்கும். உலகின் பெரிய சூதாட்டக்கூட நகரமாக இருக்கும் சீனாவின் மக்காவ்வுக்கு தாய்லாந்து போட்டிக் கொடுக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சூதாட்டத்தை நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை, அதன் மூலம் பொருளியலுக்கு வரும் நன்மை, வரியால் கிடைக்கும் நிதி போன்றவற்றை ஆதரிக்கிறோம் என்றார் தவிசின்.
இதற்கு முன் தாய்லாந்தில் சூதாட்டக் கூடங்கள் அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து எந்த ஒரு அரசாங்கமும் அதை நடைமுறைப்படுத்தவில்லை.
தாய்லாந்தில் சட்டவிரோதமாக சூதாட்டக் கூடங்கள் செயல்படுகின்றன, மேலும் அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடான கம்போடியாவில் சூதாட்டக் கூட்டங்களுக்குச் சென்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.