சென்னை: கள்ளத் தோணியில் பத்திரமாக தமிழகத்திற்கு வந்து சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர், சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் வேலை வாய்ப்புத் தரும்படி கேட்டிருக்கிறார். அவரிடம் விசா, பாஸ்போர்ட் இல்லை என்ற காரணத்திற்காக அவரை போலிசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் இலங்கை வவுனியா காந்தி குளத்தைச் சேர்ந்த த.மோகன் தாஸ் (22) என்பதும், அவரது தந்தை இறந்துவிட்டதால் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ரூ.40 ஆயிரம் கொடுத்துக் கள்ளப்படகில் ராமேசுவரத்துக்கு வந்ததும், சில நாள்கள் சுற்றித் திரிந்த பின் மதுரைக்கு வந்து, சிம்கார்டு வாங்கி தனது குடும்பத்தினரிடம் பேசியதும் தெரியவந்தது.
பணம் முழுமையாகச் செலவானதால் சென்னைக்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணச்சீட்டு இன்றி வந்து, பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடிக் கிடைக்காததால் சாலையோரத்தில் தங்கியதாகவும், காவல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டால் வேலை கிடைக்கும் என்று சிலர் கூறவே இங்கு வந்ததாகவும் இளைஞர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்குத் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்பட்ட பின்னர், கள்ளத்தனமாக இந்தி யாவுக்குள் புகுந்த குற்றத்திற்காக மோகன்தாசை கைது செய்தனர். நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி புழல் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார். சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு ஆணையரகத்துக்குச் செல்லும்படி சிலர் கூறியதைக் கேட்டு, தவறுதலாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்ததாக அவர் கூறினார்.