பார்சிலோனா: ஸ்பெயினில் உள்ள மருத்துவமனை ஒன்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) உள்ள நோயாளிகளின் மனநலனை மேம்படுத்த நாய்களைப் பணியில் ஈடுபடுத்துகிறது.
பார்சிலோனா நகரில் இருக்கும் ‘டெல் மார்’ மருத்துவமனை இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய முயற்சி சோதனைக் கட்டத்தில் உள்ளது.
செல்லப் பிராணிகளின் மூலம் சிகிச்சை அளிப்பதில் கைதேர்ந்த அமைப்பான அஃபினிட்டி அறநிறுவனத்துடன் இணைந்து அம்மருத்துவமனை இம்முயற்சியில் இறங்கியுள்ளது.
இத்திட்டத்தில் பங்கேற்கும் நோயாளிகளைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நாய்கள் வாரந்தோறும் இருமுறை நேரில் சென்று பார்க்கும். ஒவ்வொரு முறையும் நாய்கள் 15-20 நிமிடங்களுக்கு நோயாளிகளைக் ‘கவனித்துக்கொள்ளும்’.
நாய்கள் காட்டும் பாசத்தின் மூலம் நோயாளிகளுக்கு மனத்தளவில் புத்துயிர் தருவது இம்முயற்சியின் நோக்கமாகும்.
இந்த மாறுபட்ட சிகிச்சைக்கு முன்பும் பின்பும் நோயாளிகளின் உமிழ்நீர்ச் சோதனைக்காக சேகரிக்கப்படும். அதைக் கொண்டு அவர்களின் மனநலன் மேம்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவரான டாக்டர் லூசியா பிக்காஸோ கூறினார்.
இத்திட்டத்தால் நோயாளிகள் மட்டுமின்றி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஊழியர்களும் பலனடைவதாக அஃபினிட்டி அறநிறுவன அமைப்பின் விலங்கு சிகிச்சைத் திட்டங்களை வழிநடத்தும் மரிபெல் விடா தெரிவித்தார்.