தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள உதவி தேவைப்படும் இயல்பற்ற நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு நன்கொடை அமைப்பான ‘டாட்டர்ஸ் ஆஃப் டுமாரோ’ (டிஓடி), நீக்குப்போக்கான நேர அடிப்படையில் குழந்தைப் பாரமரிப்புச் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்க முன்வந்துள்ளது.
2018ல் குழந்தை வளர்ப்புத் திட்டத்தை முதன் முதலில் தொடங்கிய அந்த அமைப்பு, மீண்டும் ஊழியரணியில் இணைய விரும்பும் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு ஆதரவு தேவைப்படுவதைக் கவனித்தது.
தொடங்கிய ஓராண்டுக்குள் ‘டிஓடி’, 24 சமூக குழந்தை வளர்ப்பு நிலையங்களைத் தொடங்கி, 30 குடும்பங்களைச் சேர்ந்த 50 பிள்ளைகளுக்கு உதவியது. அதன் மூலம் தங்களுக்குக் கிடைத்த வேலை வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொண்டனர் என்று டிஓடி அமைப்பின் நிகழ்ச்சி மேம்பாடு மற்றும் காப்பகத்துக்கான மேலாளர் பிரிசில்லா டே தெரிவித்தார்.
இதுவரை, 130 குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளன. 60 குழந்தை குழந்தை வளர்ப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குழந்தை வளர்ப்பாளர்களும் குடும்பங்களும், அவர்கள் வசிக்கும் இடங்கள், விரும்பும் நேரம், குறிப்பிட்ட சேவை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இணைக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் பெற்றோர் வீட்டில் பராமரிக்கப்படுவார்களா அல்லது குழந்தை வளர்ப்பாளர்களின் வீட்டில் பராமரிக்கப்படுவார்களா போன்ற ஏற்பாட்டையும் செய்துகொள்ளலாம். பராமரிப்பு நேரம் இரவு 7 மணிக்குப் பிறகும் நீட்டிக்கப்படலாம். ஆனால் அது நள்ளிரவைத் தாண்டக்கூடாது.
இத்திட்டம் 2022ல், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சால் பங்காளித்துவ ரீதியில் முறைப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, இதுவரை 900 மணிநேரக் குழந்தை வளர்ப்புச் சேவை வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிள்ளைக்கு ஒரு மணிநேரத்துக்கு $5 என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, பெற்றோர்களுக்கு கைக்குழந்தை வளர்ப்பை வழங்கும் புதிய சேவையை மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு மாதம் முதல் 18 மாதம் வரையிலான குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை தெரிவைப் பெற்றோர் பெறுவர்.
நடுத்தர வருமானக் குடும்பம் செலுத்தும் கட்டணம் போல, கழிவுகளுக்குப் பிறகு இத்திட்டத்தின் சேவைக் கட்டணமும் அமையும். அது மாதம் சுமார் $700 ஆக இருக்கும்.