புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கக்கோரி சட்ட மாணவர் ஒருவர், வழக்கறிஞர் கரண்பால் சிங் மூலம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். ‘நாங்கள் இந்திய மக்கள்’ என்ற பெயரில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
கெஜ்ரிவாலை அவரது பதவிக்காலம் மற்றும் விசாரணை முடியும் வரை நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் பதிவு செய்யப்பட்ட அனைத்து குற்ற வழக்குகளிலும் அசாதாரண இடைக்கால பிணையில் விடுவிக்க மனுதாரர் ‘ரத்து’ அதிகாரத்தை பயன்படுத்தி முடிவெடுத்துள்ளார் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
“ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், தனது சட்டபூர்வ தீர்வுகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் அவருக்கு இருக்கின்றன.
கெஜ்ரிவால் சார்பாக மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மனுதாரர் சட்டக் கல்லூரியில் வகுப்புகளுக்குச் செல்கிறாரா? அவர் சட்டக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது” என்றும் நீதிபதிகள் கூறினர்.