பாட்டியாலா: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததற்கு அதில் கலந்திருந்த அளவுக்கதிகமான செயற்கை இனிப்பூட்டியே காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மார்ச் 24ஆம் தேதி தனது பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் மான்வி.
மான்வியின் பிறந்தநாளுக்காகக் குடும்பத்தினர் பாட்டியாலாவில் உள்ள பேக்கரியிலிருந்து இணையத்தின் மூலம் சாக்லெட் கேக் வாங்கினர்.
அதைச் சாப்பிட்ட பிறகு அவர்கள் அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
சிறுமி மான்வி உயிரிழந்ததால், அதிகாரிகள் அந்த பேக்கரியிலிருந்து கேக்கின் மாதிரியைப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
கேக்கில் அதிக அளவிலான ‘சாக்கரின்’ எனப்படும் செயற்கை இனிப்பூட்டி கலந்திருந்தது அதில் தெரியவந்ததாக மாவட்டச் சுகாதார அதிகாரி டாக்டர் விஜய் ஜிந்தால் கூறினார்.
இந்த இனிப்பூட்டியை அதிக அளவில் உட்கொண்டால் உடலில் சர்க்கரை அளவு அதிவேகமாக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது.
பேக்கரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.