ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கு வசதியாக, ஜோகூர் சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இந்தப் புதிய குடிநுழைவு முறையை மலேசியாவின் குடிநுழைவுத்துறை நிர்வகிக்கும்.
சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்ல கடப்பதிழைக் காட்டுவதற்குப் பதிலாக சிங்கப்பூருக்கு வேலை நிமித்தம் பயணம் செய்யும் தொழிற்சாலை ஊழியர்கள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
இந்தப் புதிய திட்டத்துக்கு முன்னோட்டமாக, தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள் ஏறி, ஸ்கேனர்களைப் பயன்படுத்தி ஊழியர்களின் கியூஆர் குறியீடுகளை வருடுவர்.
இந்தத் தகவலை நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் ஜோகூர் மாநிலப் பொதுப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுவின் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சாலே ஏப்ரல் 23ஆம் தேதியன்று தெரிவித்தார்.
உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையை சிங்கப்பூர் கடந்த மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தியது.