பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா அனைத்துலக விமானநிலையத்தில் வந்திறங்கிய விமானப் பயணியிடமிருந்து 10 அனகோண்டா பாம்புகளை பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பேங்காக்கில் இருந்து வந்திறங்கிய விமானப் பயணிகளின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பயணியின் பையில் இருந்து ஏதோ நெளிவதுபோல் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக அவரது கைப்பையை வாங்கித் திறந்து பார்த்தபோது, அதில் 10 மஞ்சள் நிற அனகோண்டாக்கள் இருந்தன. இதையடுத்து பாம்புகளைக் கடத்தி வந்தவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், “வனவிலங்கு கடத்தலைப் பொறுத்துக்கொள்ள முடியாது, வனத்துறை அதை அனுமதிக்காது, பாம்புகளைத் கடத்துவது பெருங்குற்றம்,” என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.