சிங்கப்பூர் சரியானப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதை 2024ஆம் ஆண்டுக்கான வேகமான பொருளியல் வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.
உலகளாவிய ஏற்றுமதிக்கான தேவை மற்றும் சுற்றுலா தொடர்பான தொழில்களில் ஏற்பட்டுள்ள ஏற்றமான போக்கு உள்ளிட்டவை வேகமான வளர்ச்சிக்கு துணை புரியும் என்று சிங்கப்பூர் மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு விழுக்காட்டிலிருந்து மூன்று விழுக்காடு வரை இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் (மாஸ்) கடந்த நவம்பரில் கணித்திருந்தது.
இதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஆணையம் கூறியுள்ளது.
2023ல் பொருளியல் 1.1 விழுக்காடு வளர்ச்சி கண்ட பிறகு தனது மதிப்பீட்டை ஆணையம் வெளியிட்டிருந்தது.
பொருளியல் வளர்ச்சிக்கு முக்கியமான துறைகள், கொவிட்-19 தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை நோக்கிச் செல்கின்றன.
“கடந்த ஆண்டைவிட வர்த்தகம் தொடர்பான துறைகள் மற்றும் நவீன சேவைகளின் வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. அதே சமயத்தில் பயணம் தொடர்பான மற்றும் உள்நாட்டை நோக்கமாகக் கொண்ட துறைகள் மிதமாகச் செயல்படும். ஆனால் இவற்றின் வளர்ச்சி மேல்நோக்கியே இருக்கும்,” என்று ஆணையம் குறிப்பிட்டது.
ஆண்டுக்கு இரு முறை மேற்கொள்ளப்படும் பொருளியல் ஆய்வை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) ஆணையம் வெளியிட்டது.
தற்போதைய உலகளாவிய மின்னணுவியல் துறையின் மீட்சியும் உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் வட்டி விகிதங்களில் செய்யப்படும் மாற்றமும் பொருளியல் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துலகப் பண நிதியத்தின் உலகளாவிய பொருளியல் மதிப்பீட்டைத் தொடர்ந்து சிங்கப்பூர் பொருளியல் மீதான ஆணையத்தின் கண்ணோட்டம் வெளிவந்துள்ளது.
2024 ஜனவரியின் 3.1 விழுக்காட்டிலிருந்தும் 2023 அக்டோபரில் 2.9 விழுக்காட்டிலிருந்தும் 2024ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளியல் வளர்ச்சி 3.2 விழுக்காடு இருக்கும் என்று நிதியம் முன்னுரைத்தது.
அந்த உலகளாவிய வளர்ச்சி 2024ல் மூன்று விழுக்காடு வரை விரிவடையும் என மாஸ் நம்புகிறது. இது, 2023ல் பதிவான 3.3 விழுக்காட்டைவிடச் சற்றுக் குறைவாகும்.
இருப்பினும் நிதி நிலவரத்தின் இறுக்கத்திலிருந்து 2024ஆம் ஆண்டின் பொருளியல் பாதிப்பில்லாமல் மேம்படும். பொருளியல் வளர்ச்சி ஆண்டு முழுவதும் படிப்படியாக பரந்த அடிப்படையில் அமைந்திருக்கும் என்ற ஆணையம், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கத் தொடங்கும் என்பதால் 2025ல் உலகளாவிய வளர்ச்சி 3.3 விழுக்காட்டுக்கு மேம்படும் என்று கூறியது.