மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி, அவர் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் ஓரினப் புணர்ச்சி காணொளி குறித்து போலிசாரிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாக அவரது வழக்கறிஞர் என்.சுரேந்திரன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக அமைச்சர் அஸ்மினின் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக போலிசார் ஞாயிற்றுக்கிழமை அவரது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டனர்.
திரு அஸ்மின் இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, திங்கட்கிழமை வாக்குமூலம் அளித்ததாகத் திரு சுரேந்திரன் தெரிவித்தார்.
“தீய நோக்கம்கொண்ட பொய்யான தாக்குதலுடன் அமைச்சரின் நன்மதிப்பைக் குலைத்து, அவரை வீழ்த்துவதற்காகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது என்பதற்கான அறிகுறிகள் தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றன,” என்றார் திரு சுரேந்திரன்.
“இக்காரியத்தைச் செய்தவர்களிடம் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்களும், நூதனமான உத்திகளும், தெளிவான அரசியல் நோக்கமும் உள்ளன,” என்றார் அவர்.
திரு அன்வர் இப்ராஹிமின் கியடிலான் ரக்யாட் கட்சியின் துணைத் தலைவரான திரு அஸ்மின், சக கட்சி உறுப்பினருடன் ஓரினப் புணர்ச்சி காணொளியில் இடம்பெற்றிருந்ததாகச் சென்ற வாரம் தகவல் வெளியானது.