உயர்மாடிகளிலிருந்து குப்பை வீசிய 7,700க்கும் மேலான சம்பவங்கள் 2016ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தேசிய சுற்றுப்புற வாரியத்திடம் புகார் செய்யப்பட்டன. ஓராண்டில் சராசரியாக 2,300 முதல் 2,800 சம்பவங்கள் நிகழ்ந்தன.
பெரும்பாலான சம்பவங்களில், தேசிய சுற்றுப்புற வாரியம், நகர மன்றங்கள், அடித்தள அமைப்புகள் ஆகியன எச்சரித்த பிறகு நிலைமை மேம்பட்டது. ஆனால் சில சூழ்நிலைகளில் இச்செயல்கள் நீடித்ததாகச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இப்பிரச்சினைக்குத் தீர்வாக, 2012 முதல் தேசிய சுற்றுப்புற வாரியம் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி வருகிறது. இந்தக் கேமராக்கள் வாரியத்தின் முயற்சிகளுக்குப் பெருமளவு பங்களித்திருக்கின்றன,” என்றார் டாக்டர் கோர்.
ஆகஸ்ட் 2012க்கும் டிசம்பர் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் உயரத்திலிருந்து குப்பை வீசிய 2,200க்கும் அதிகமானோரைப் பிடிப்பதற்கு இந்தக் கேமராக்கள் உதவின. இவர்களில் 52 பேர் மறுபடியும் குற்றம் புரிந்தவர்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30), ஆஸ்திரேலியரான ஆன்ட்ரூ கொஸ்லிங் கூட்டுரிமை குடியிருப்பின் ஏழாவது மாடி மின்தூக்கி தளத்திலிருந்து மதுபான போத்தலை வீசி எறிந்து, 73 வயது முதியவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இதுபோன்ற குப்பை வீசும் சம்பவங்களைத் தடுக்க கடுமையான தண்டனைகள் நடப்பிலிருப்பதாக டாக்டர் கோர் தெரிவித்தார்.
முதல்முறையாகக் குற்றம் புரிவோருக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் $2,000 வரையிலான அபராதம் விதிக்கப்படுகிறது. மறுபடியும் குற்றம் புரிவோருக்கு $10,000 வரையிலான அபராதம் அல்லது அதோடு சீர்திருத்தப் பணி உத்தரவு விதிக்கப்படலாம்.
உயரத்திலிருந்து குப்பை வீசும் சம்பவங்கள் பற்றி தேசிய சுற்றுப்புற அமைப்பின் நேரடித் தொலைபேசி சேவையை அழைத்து பொதுமக்கள் புகார் செய்யலாம் அல்லது “myENV” செயலியின் மூலமாகக் குற்றச்செயலின் புகைப்படங்களையும் காணொளிகளையும் அனுப்பி வைக்கலாம்.
சென்ற ஆண்டு பொது இடங்களில் குப்பை வீசப்பட்ட சம்பவங்களின் தொடர்பில் சுமார் 26,000 புகார்களும் பொறுப்பில்லாமல் வீசப்பட்ட கனமான பொருட்கள் பற்றி 2,700 புகார்களும் தேசிய சுற்றுப்புற வாரியத்துக்குக் கிடைத்தன. பொது இடங்களில் குப்பை போடுவதைத் தடுப்பதற்குச் சுமார் 39,000 நடவடிக்கைகளையும் கனமான பொருட்கள் சட்டவிரோதமாக வீசப்படுவதைத் தடுப்பதற்கு 30 நடவடிக்கைகளையும் வாரியம் மேற்கொண்டது.